இது பற்றி தெரியவருவதாவது:- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பிரபாகரனின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இளங்கோவன் தலைமையில் அவ்விடத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்து எறிந்தனர்.
மேலும் பிரபாகரனின் பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இச்சம்பவத்தையடுத்து நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். சென்னை வீட்டில் காவலாளி மோசஸ் மட்டுமே இருந்தார்.
நேற்றிரவு 11.30 மணிக்கு காவலாளி மோசஸ் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் இளங்கோவன் வீட்டுக்கு 3 மர்ம மனிதர்கள் சென்று வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள்.
அது வீட்டு முன்பக்க அறை வாசலில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன. நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
சத்தம் கேட்டு காவலாளி மோசஸ் முன் பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்ம மனிதர்கள் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.
இதுபற்றி ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு காவலாளி மோசஸ் தகவல் கொடுத்தார். பிறகு அடையார் பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
அடையார் பொலிஸார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு மர்ம நபர்கள் குறித்து 50 க்கும் மேற்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் பின்னர் பொலிஸார், சீமானின் உதவியாளரும் டைரக்டருமான மித்ரன், அருண், மணி என்ற நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
0 comments: